பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, ஜூலை 24

மிளகு ரசம்.


சாவி வார இதழில்1970 களில் பால குமாரன் மெர்குரி பூக்கள் எழுத ஆரம்பித்த நேரம்.அதன்பின்னர் சாவி அவர்கள் நிறைய புதிய வர்களுக்கு ஆதரவளித்தார். புதிதாக ஆர்வத்துடன் வருபர்களை எழுதவைத்து அவர்களை வளரசெய்தார். மாலன் , பாலகுமாரன் இன்னும் நிறைய பேர்கள் அப்போது பரிமளிக்கத்தொடங்கினார்கள். ஹைக்கூ என்ற ஜப்பானிய முறை கவிதை முறையும் அதன் பின்னர் புதுக்கவிதை என்ற மரபும் ஆரம்பமான தருணங்கள் அது. பின்னாளில் அதே புதியவர்கள் சாவியின் விருப்பத்தின் பேரில் தனியாக திசைகள் என்ற வாரப்பத்திரிக்கை யையும் ஆரம்பித்தனர். நிறைய  புதியவர்கள் பங்கேற்றனர். அவர்களின் வித விதமான படைப்புக்கள் நிறைய அதில் இடம் பெரும். அப்போது படித்த ஒரு நகைசுவை கதையினை இங்கு நினைவு கூறுகிறேன்.

கதையின் போக்கில் சில பாத்திரப்படைப்புக்களின் இனத்தை சொல்ல நேருவதால் யாரும் சண்டைக்கு வந்துவிடாதீர்கள். அவைகள் வெறும் நகைசுவைக்காக அன்றி யாரையும் இழித்து கூறவோ பழிக்கவோ அல்ல என்பதை தாழ்மையுடன் சொல்லிகொள்கின்றேன்.இது வெறும் சர்தார்ஜி ஜோக்குகள் போல. 

பதிவுலகில் சண்டைக்கோழிகளாக நிறைய "மூத்த"
பதிவர்கள் கைகளில் லத்தியுடன் கால்களில் கத்திகளையும் கட்டிக்கொண்டு அலைவதால் இந்த முன் விளக்கம்.

சரி இனி கதைக்குள் போகலாம். 

அந்த சிறிய கிராமத்தில் வேறு கடைகள் என்று சொல்லும்படி ஒன்றுமில்லை. நமது செட்டியார் கடயைத்தவிர. செட்டியார் அந்த ஊரில் தனவந்தர். நாலு கட்டு வீடும், தோட்டமும், வயலும், தென்னந்தோப்புமாய் அமோகமாக இருந்தார். அவரின் மளிகை கடையில் தான் அந்த சிற்றூர் ஜனங்கள் தங்களுக்கு தேவையான அன்றாட பொருட்களை வாங்குவர். செட்டியார் மிகவும் கறார் பேர்வழி. யாருக்கும் கடன் தரமாட்டார். மேலும் பயங்கர கஞ்சனாகவும் அவரை ஊர்மக்கள் அவரை கருதி வந்தனர். உண்மையும் அதுதான். செட்டியாருக்கு ஒரேஒரு பிள்ளை. அதிகம் படிக்கவைத்து காசை "கரியாக்க " அப்பாவுக்கு எண்ணமில்லை.அந்த பிள்ளையும் கரும சிரத்தையாக அப்பாவுடன் கடையில் இருக்கும்.

அன்று பக்கத்துக்கு கிராமத்தில் தென்னந்தோப்பு ஒன்று விற்பனைக்கு வருவதை அறிந்து அதை 'சல்லிசாக' விலை பேசி முடித்துவிடலாம் என்ற ஏற்பாட்டுடன் கிளம்புகிறார். பிள்ளையை கடையில் கவனமாக இருக்கும்படி சொல்லிவிட்டு, அன்று கடைக்கு கொள்முதல் செய்த மிளகு, சீரகம், மல்லி ,புளி மற்றும் மிளகாய் வற்றல் மூட்டைகள் பக்கத்துக்கு நகரத்திலிருந்து வண்டியில் வருவதையும், அவைகள் கடைக்கு வந்து சேர்ந்தபின்னர் ஒவ்வொரு மூட்டையும் கவனமாக சோதனை செய்து எடைகளை சரிபார்த்து பின்னரே கடையில் வைக்கும்படி சொல்லிவிட்டு அதற்க்கான பணத்தையும் சரியாக எண்ணி அவைகளை சுருட்டி நூல் கொண்டு கட்டி அதன் மீது காகிதத்திலும் தொகையினை எழுதி வைத்துவிட்டு புறப்பட்டார். 

பிள்ளையும் கவனமாக அன்றய வியாபாரத்தை பார்த்துக்கொண்டது. பல சரக்கு வண்டியும் வந்தது. பிள்ளை எல்லா மூட்டைகளையும் எடைகளை சரிபார்த்து பின்னர் ஒவ்வொரு மூட்டையாய் அவிழ்த்து சோதனை செய்தது. அளவில் சிறிதாக இருந்த சீரக மூட்டையை முதலில் அவிழ்த்து உள்ளே முழங்கை போகும்வரை நுழைத்து துழாவி பார்த்துவிட்டு பின்னர் மிளகு மூட்டையை அவிழ்த்து அதேபோல முழங்கை அளவுக்கு உள்ளே விட்டு துழாவியது. சீரகமும், மிளகும் கலந்த வாடை மூக்கை துளைக்க பின்னர் மல்லி மூட்டையை அவிழ்த்து அவ்வாறே செய்தது. செட்டியார் அப்படித்தான் சோதிப்பாராம். நல்ல வேலை மிளகாய் மூட்டையை அவாறு செய்யவில்லை. எல்லாம் சரியாக இருக்கவே பணத்தை கொடுத்து வண்டியை அனுப்பியதும் 
பிள்ளைக்கு பசிக்க ஆரம்பித்தது. சரிதான் என்று கடையை மூட்டி பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றது. 

செட்டியாரம்மா பிள்ளையைகண்டதும் குளித்துவிட்டு சாப்பிட வருமாறு அழைக்க, பிள்ளை தனக்கு கை பொறுக்கும் அளவுக்கு சூடுள்ள வெந்நீர் வேண்டுமென கேட்க, தாயும் வீட்டு முற்றத்தில் வெய்யிலில் படுமாறு வைத்துள்ள குண்டானில் இருந்த தண்ணீரை தந்தாள். கை பொறுக்கும் சூட்டில் இருந்த அந்த நீரில் பிள்ளை தன் இரு கைகளையும் நன்றாக கழுவிக்கொண்டது. பின்னர் அம்மாவிடம் "இந்தா இதுதான் இன்னைக்கு ரசம் " என்று சொல்லிவிட்டு குளிக்கசென்றது. அம்மாவிற்கோ தாளவில்லை தன் பிள்ளையின் புத்திசாலித்தனம். அதே நேரத்தில் வெளியூர் சென்ற செட்டியாரும் களைப்புடன் வீட்டிற்கு வந்தார். 

கணவனுக்கு சாப்பிட பறிமாறினாள் அந்த அம்மாள். குண்டானில் இருந்த 'ரசத்தை' எடுத்து அவர் அருகில் வைத்துவிட்டு பெருமையுடன் தன் பிள்ளை ரசம் வைத்த விதத்தை சொல்ல, செட்டியாருக்கோ வந்ததே கோபம்! "உன்னை போலவே உன் பிள்ளைக்கும் தலையில் ஒன்றுமில்லைடீ ... ஒரே நாளில் பத்து விரல்களையும் அலம்ப வேண்டுமா? ஒரு நாளைக்கு ஒரு விரல் வீதம் அலம்பினால் பத்து நாளைக்கு மிளகு ரசம் ஆகியிருக்குமே , தருதலைகளா" என்று கத்த , அந்த அம்மாவோ பக்கத்தில் இருந்த மரத்தூனை பிடித்துக்கொண்டு சரிந்தாள்.

நம்ம பதிவுலக அறுசுவை அரசிகள் தலைப்பை பார்த்து விட்டு
 "நமக்கு போட்டியா " என்று வந்தவர்கள் எல்லாம் மிளகு ரசம் வைக்க கற்று கொண்டீர்களா? ஓட்டை  போடுங்கள் அம்மணிகளா!




6 comments:

Karthick Chidambaram சொன்னது…

:)))))))

ஜெய்லானி சொன்னது…

நாங்கூட தக்காளி ரசமோன்னு நினைச்சிட்டேன்..
அவ்வ்வ்வ்வ்வ்வ்

Menaga Sathia சொன்னது…

நான் கூட தலைப்பை பார்த்து சமையல் குறிப்பு எழுதிருக்கிங்கன்னு நினைத்தேன்..படித்த பிறகு சிரிப்பு தாங்கல..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

நல்ல வேளைணே..பையனுக்கு அவசரமா எதுவும் வரலே..

வந்திருந்தா..மிளகு ரசமாவது?.கொள்ளு ரசமாவது? .ஹி..ஹீ

வேலன். சொன்னது…

என்னடா மாம்ஸ் சமையலில் இறஙகிட்டாரோ என்று நினைத்தேன்..பதிவு அருமை---சாரி...ரசம் அருமை.வாழ்க வளமுடன்,
வேலன்.

R.Gopi சொன்னது…

என்ன தல

சமையல் குறிப்பில் இறங்கிட்டீங்கன்னு கேக்கலாம்னு பார்த்தா.........

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... என்னய்யா இது...

நல்லா வச்சீய்யா மிளகு ரசம்.....

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக